Popular Posts

Wednesday, November 20, 2013

விஸ்வநாதன் ஆனந்த் – வாராது வந்த ஓர் மாமணி!



ராஜ்ய-பரிபாலனம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அண்டை நாட்டுக்காரனின் ஒவ்வொரு அசைவின்மீதும் ஒரு உன்னிப்பான கவனிப்பும், அதற்கான எதிர் நடவடிக்கையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். வெளியுறவு துறையும் அதற்கான உளவுப்பிரிவும் கண்கொத்திப்பாம்பாக இருக்க வேண்டிய கட்டாயம். சற்று கண்ணயர்ந்தால் போதும் எதிரி, ராஜாவை சிரச்சேதம் செய்துவிட்டு ராணியை கவர்ந்து சென்று விடுவார். நாட்டின் செல்வங்கள் அனைத்தும் கொள்ளை போய்விடும். ஒரு சிறு படையை வைத்துக்கொண்டு, சாணக்கியன், ஒரு பெரிய ராஜ்யத்தையே வீழ்த்திக்காட்டினான். யாருமே ஊகிக்க முடியாத திட்டங்கள் அவை! எதிரி புற முதுகு காட்டிக்கூட ஓடமுடியாத போர் யுக்திகள்! நமது பாரத மண்ணில்தான் எத்தனை ரத்த களறிகள். பல சாம்ராஜ்யங்கள் தோன்றி, பின்பு வீழ்ந்த சரித்திர ஜாலங்கள்! ராஜ தந்திரம் என்றால் என்ன? என்பதை உலகுக்கு சொல்லித்தந்ததே பண்டை காலத்து பாரத நாடுதான்.

ஆக, இந்த சதுரங்கம் எனும் விளையாட்டு, இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் ன்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சதுர்என்றால் புத்திசாலித்தனம் என்று ஒரு பொருள் உண்டு  சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் விளையாடப்பட்ட விளையாட்டு இது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பிறகு நாம் அறிவில் தேய்ந்து, அடிமைப்பட்டு, சின்னா பின்னமாகி, கட்டெறும்பான கதைதான் உங்களுக்கும் தெரியுமே?

நமது விளையாட்டான சதுரங்கத்தை வந்தவர்கள் எடுத்துச்சென்று விட்டார்கள். அதற்கு பதிலாக, மறந்து போய் கிரிக்கெட்’டை இங்கே விட்டுவிட்டு போய்விட்டார்கள். அதன் பேயாட்டத்தைப்பற்றி பிறிதொரு நாள், நொறுக்கி, வறுத்து வதக்கி, வாய்க்கு ருசியாக தருகிறேன்.

உனக்கு செஸ் விளையாடத்தெரியமா? – என்று கேட்டால், ஏதோ கெட்ட வார்த்தையை நான் சொல்வதாக எண்ணி முறைத்துப்பார்க்கிறார்கள். ’அடே! இது நம்ம நாட்டின் விளையாட்டு! முன்னோர்கள் நமக்காக கண்டுபிடித்து விட்டுச்சென்ற விளையாட்டு’ என்று சொன்னால், “போங்கண்ணே! சும்மா விளையாடாதீங்க. கிரிக்கெட்டுதான் நம்ம ஊரு விளையாட்டு. யாரை வேணும்னாலும் கேட்டுப்பாருங்க!” – என்றே நமது வாண்டுகள் பதில் தருகிறார்கள்.

நாம் தொட்டு விட முடியாத உயரத்திற்கு சென்று விட்ட உலக செஸ் அரங்கில், இந்திய அளவில் எந்த வீர்ருமில்லை என்கிற நிலமைதான் 1980 வரை நீடித்தது.

 1980-களில், ”யாரோ ஆனந்த்’தாம்! இந்தியாவைச்சேர்ந்த ஒரு மீசை முளைக்காத பொடியன். அசத்துகிறான்” என்கிற முணுமுணுப்பு செஸ் வட்டாரத்தில் வரத்துவங்கிய போது, இந்தியாவை சேர்ந்த யாருமே, கிராண்ட் மாஸ்டர் அளவுக்கு வரவில்லையே என்கிற வெட்கத்தில் கூனி குறுகிக்கிடந்த இருந்த இந்திய செஸ் அமைப்பு விழித்துக்கொண்டது.


அந்த சிறுவன்தான், நாம் காலாகாலமாக அனுபவித்த வந்த அசிங்கத்தை துடைத்து, மானம் காப்பான் என்பதை அறிந்து கொண்ட அவர்கள் சுறுசுறுப்பானார்கள். தொழிலதிபர் திரு. மகாலிங்கம் என்றுதான் கருதுகிறேன். அவரது அரவணைப்பில், அதற்கான முயற்சிகள் நடந்தன.  விஸ்வநாதன் ஆனந்த் என்கிற மலர் அரும்பி, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் எனும் தகுதியை அடைந்து, செஸ் வானில் வாசம் வீச ஆரம்பித்த வருடம் 1988. அப்போது அந்த சிறுவனின் வயது 18!

"ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த ஓர் மாமணி

என்று பாரதி பாடியது இந்த சிறுவனுக்கே என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
சர்வ தேச அரங்கில் இந்தியா விழித்துக்கொண்டது. புயல் மையம் கொண்டு தாக்குவதை போல இந்த சிறுவன், செஸ் வட்டாரத்தில் நிகழ்த்திய சாதனைகளை இங்கே பட்டியலிட்டால் இந்த பதிவு போதாது. செஸ் அரங்கங்களில் கர்வம் கொண்டிருந்த ரஷ்யா, இன்னும் பிற ஐரோபிய நாடுகள் இந்த சிறுவனில் வருகைக்கு பின்னரே, ஒரு இந்தியனை களத்தில் சந்தித்து வீழ்ச்சியை காணத்தொடங்கின. உலக செஸ் மேதைக்கான அரங்கங்களில் முதல்முறையாக இந்திய கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியதற்கான மூல காரணம் விஸ்வநாதன் ஆனந்த்தால் தான்! உலக செஸ் அரங்குகளில் இன்று இந்தியர்கள், வெட்கபடாமல், நான் இந்தியன் என்று கர்வத்தோடு சொல்ல முடிகிறது என்றால், அதற்கும் காரணம் விஸ்வநாதன் ஆனந்த் என்கிற அதிசய மனிதன்தான் என்பதில் வேறு கருத்துகள் கிடையாது.
அவரது பயணம் இன்று வரை வெற்றிப்பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. அவரைப்பொறுத்த வரை, இனிமேல் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும், இந்தியாவில் இவருக்கு மாற்று யாரும் இன்று வரை இல்லை. ஆகவே அதுவரை இவர் நம் நாட்டுக்காக ஆட வேண்டிய தொடர் அவசியம் இருக்கிறது.
ஆனந்தைப்பற்றி மேலும் அதிகம் அறிந்து கொள்ள கூகிலை தட்டினாலே போதும். இப்போது அவரை எதிர்த்து விளையாடி வரும் நார்வே நாட்டு மாக்னெஸ் கார்ல்சென், இன்னொரு ஆனந்த் என்றே சொல்லலாம். இருவரில் யார் வென்றாலும் ஆனந்தமே!


சென்னையில். 2013 க்கான உலக சேம்பியன்ஷிப் நடப்பது, இது கனவா? நனவா? என்று இன்றுவரை என்னால் நம்ப முடியவில்லை. அதை சாத்தியமாக்கி, நாட்டுக்கு கௌரவம் சேர்த்துத்தந்த தமிழக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 
விரைவில் பாரத-ரத்னா விருது விஸ்வநாதன் ஆனந்த அவர்களை  அலங்கரிக்கும் பொறுப்பை, பெருமையை ஏற்றுக்கொள்ளட்டும்!

-அன்புடன் திருநாவு
21-11-2013 
நன்றி:- ஃபோட்டோ உதவிகளுக்கு - கூகிள்.காம்

Tuesday, November 12, 2013

“குதூகல குளியலுக்கான குறிப்புகள்”


 மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும், ஏதாவது ஒரு சமயத்தில் குளித்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளாகிறான். ஆனால் ஏன் எதற்காக.. என்கிற காரணங்களை, இதுவரை எந்த விஞ்ஞானியும் தெளிவாக ஆராயவில்லை என்றே ஆய்வுக்குறிப்புகள் சொல்கின்றன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வேண்டாத விஷயங்களைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்துள்ளார், ஆனால் இந்த குளியலைப்பற்றி அவர் எங்கும் தனது ஆய்வுக்குறிப்பில் சொல்லவில்லை என்பதே எனது இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு மையமாக மாறியுள்ளது என்பது ஒரு வியப்பான செய்திதானே!
கழுதை, குதிரை, மாடு, ஆடு, பூனை, யானை இவையெல்லாம் எப்படியோ, எப்படி எப்படியோ குளிக்கிறது. ஒரு முறையாக, ஒழுங்காக இருப்பதாக தெரியவில்லை. சனிக்கிழமை, நல்லெண்ணை தடவி இவையெல்லாம் குளிக்கிறதா? என்று அறியமுடியவில்லை. சோப்பு, ஷாம்பூ இன்னும் இதர பிதர இத்யாதிகளை எல்லாம்  வாங்கி முறைப்படி குளிக்கிற ஒரே ஜென்மம், மனித ஜென்மம்தான்! இருந்தாலும், மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாமல் தூங்கிவழிகிறார்கள் என்கிற அசதியான உணர்வு வந்த காரணத்தால் தான் இந்த முக்கியமான ஆராய்ச்சியை மேற்க்கொண்டுள்ளேன்.
பிறந்து மூன்று நாள் ஆன குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று, எங்க பெரிய ஆயாவை கேட்டேன். “போடா..பொசக்கட்ட நாயி! உனக்கெதுக்கு அதெல்லாம்..” என்று என்னை வைது விட்டாள் அந்த கெய்வி. தகவலை பகிர்ந்து கொள்ள, ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த கிழவி அச்சப்படுகிறார் என்றே மனதுக்குப்பட்டது. ஒரு ஆர்டிஐ போட்டு வைத்திருக்கேன். இந்த கட்டுரை முடியும் வரை  அந்த கெய்வி அதாவது என் ஆயா, எந்த பதிலையும் தரவில்லை.
              அழுக்கு கலரில் ஜீன்ஸ் போட்ட ஒரு தம்பியிடம், ஒரு அவ நம்பிக்கையோடு  குதூகல குளியலைப்பற்றி கேட்ட போது, “ அப்படின்னா என்ன அண்ணே? “ என்று கேட்டுவிட்டான். அவனுக்கு குளியலைப்பற்றி அடிப்படை அறிவு கூட இல்லை என்று அறிந்த போது, என்னையும் அறியாமல் கண் கலங்கி கொஞ்சம் கதறி அழுதுவிட்டேன்..
கரும்புத்தோட்டத்தில், பம்ப் செட்டு தண்ணீரில் ஹாய்யாக குளித்துக்கொண்டிருந்த, ஒரு விவசாயியைக்கண்டேன். இவரைக்கேட்டால், குளியலைப்பற்றி சில ஆவணங்கள் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையோடு, அவரை நெருங்கி, “குதூகல குளியலைப்பற்றி ஒரு குறிப்பு வேண்டும். நீங்கள் உதவ முடியுமா?” என்று துணிவுடன் கேட்டேன். ”ஒரு கோவணம் இருக்கு. அதை எடுத்து கட்டிட்டி வா! தெளிவா விளக்குகிறேன்என்று காட்டமாக பதில் வர, அங்கிருந்து நழுவினேன்.
சரி! இந்த ஆண்கள்தான் சரியான புள்ளி விபரங்களை தர தயங்குகிறார்களே என்று  எண்ணிக்கொண்டே, சில பெண் நண்பிகளிடம் இது பற்றி கேட்க, ….ம்! இந்த ஆண்களே பரவாயில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். இப்படியா திட்டுவது? ஒரு கேள்வி கேட்டால், தெரியும் அல்லது தெரியாது என்று பதில் சொல்வதுதானே முறை. அதை விட்டுவிட்டு, அடிதடியில் இறங்குவது, சகட்டுமேனிக்கு கய்வி கய்வி ஊத்துவது…. அடச்சே! இந்த ஆராய்ச்சியே வேண்டாம்… .என்கிற நிலைமைக்கு அவர்கள் என்னை கொண்டு போய்விட்டார்கள்.
கிடைத்த விவரங்களை ஒரு பத்திரியாளன் என்கிற முறையில், பதிந்துவிடுவது, பிற்காலத்தில் யாருக்காவது உதவிகரமாக இருக்குமென்றெ இதை துணிந்து எழுதி விட்டேன்.
குதூகலமான குளியலுக்கு, ஆராய்ச்சி ரீதியில் அதிகார பூர்வமான தகவல்கள் கிடைக்காத காரணத்தால், அநேகமாக ஆராய்ச்சியின் முடிவு, தர்க்கரீதியாகவும், நியாயத்தின் அடிப்படையிலும் குளிக்காமல் இருப்பதே குதூகலமானது!” என்கிற முடிவுக்கு தள்ளப்பட்டு, தற்காலியமாக, மிகுந்த தலைவலியோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
திருநாவு