Popular Posts

Sunday, December 7, 2014

”விபரீத நாடகம்”


அது ஒரு கனாக்காலம்!

(உண்மைக்கதை)


விளையாட்டு வினையாகிவிடும் என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்! அப்படி ஒரு விளையாட்டு வினையாகப்போனதுதான் எனது மேடை நாடக அனுபவம்! நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன்.
அவர் தொலைபேசியில் பிஸியாக இருந்தார்! சரி! பேசி முடியட்டும் என்று காத்திருந்தேன்.
அதாவது நாகரீகமில்லாமல் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்!
ஏதோ எங்கள் அலுவலக ஆண்டு விழாவில் ஒரு நாடகப்போட்டியாம்! இது வருடாவருடம் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சிதான்! பரிசு மற்றும் பல சலுகைகள் கிடைக்கும்!
சின்ன சின்ன நாடகங்களில் நடிப்பது என் நண்பருக்கு ஒரு பொழுதுபோக்கு. அந்த வருட நாடகத்தில் அவருக்கு ஒரு நல்ல வேஷம் வேண்டும்! அது சம்பந்தமாகத்தான் போனில் பிஸியாக இருக்கிறார் என்பது நான் ஒட்டு கேட்டதில் புரிந்தது. எங்கள் வளாகத்தில் பல பிரபல நாடக வல்லுனர்கள் உள்ளனர்!
கலைக்கு ஏது எல்லை? தெலுங்கு நாடக சபா! மலையாள நாடக சபா! பெங்காளி நாடக சபா! ஹிந்தி நாடக சபா! இப்படி பல சபாக்கள் இந்த நாடகப்போட்டியில் உற்சாகத்தோடு  பங்குகொள்ளும். ஆகவே,
ஏதாவது ஒரு நாடகத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டுமென தொலைபேசியில் எங்கள் பேட்டை பிஸ்தாக்களான டைரக்டர்களிடம், என் நண்பர் கெஞ்சிக்கொண்டிருந்தார்! அவரைப்பார்த்தால் பாவமாக இருந்தது.
நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்!
“என்னய்யா? இதுக்கு போய் கெஞ்சிட்டிருக்கே? நீ ஒரு பிரமாதமான நடிகனாச்சே! உன்னை தேடிட்டு வருவாங்க! நீயாகவே போய் வாய்ப்பு கேட்பது நல்லாவா இருக்கு?” – என்றேன்.
இவன் நக்கலாக சொல்கிறான் என்றே எண்ணிய நண்பர் கொஞ்சம் முறைத்தபடியே,
“நீ வெறும் வாய்ச்சவடால்தான்! கவிதங்கிற! கதைங்கிற! ஒலக எலக்கியம்ங்கிற! பாலா அப்படியாக்கும் பாலசந்தர் இப்படியாக்கும்னு வெத்து பேச்சு வேற! எல்லாம் வெட்டிப்பேச்சுதான்! முடிஞ்சா நீ ஒரு நாடகம் எழுதிப்போடு! நான் நடிக்கிறேன்!” –சவால் விடற மாதிரி சொல்லிட்டார்.
நான் கொஞ்சம் சவடால் பார்ட்டிதான்! பொடிக்கதைகள் சிலவற்றை எழுதி நானே படித்துப்பார்த்துவிட்டு குப்பைத்தொட்டியில் போடும் அளவுக்கு எனக்கு எழுத்து ஞானம் இருந்தது உண்மைதான்! எனக்கு ரோஷம் வருகிற மாதிரி அவர் பேசியது பிடிக்கவேயில்லை. எனக்கு சாதாரணமாவே தன்மானம் அதிகம்!
ஒரு எறும்பு என்னைக்கடிச்சாலே அதை தேடிப்பிடிச்சு திருப்பி கடிச்சாத்தான் எனக்கு தூக்கமே வரும்!
அப்படிப்பட்ட என்னை பார்த்து எப்படி கேட்டுட்டார் இந்த நண்பர்?
“நாடகம் எழுதணும்! அவ்வளவுதானே! நாளைக்கே எழுதிட்டு வர்ரேன்! நீ நடிக்கிற! உன் நண்பர்களிடம் சொல்லி தயாராக்கி வை! இது மாமியார் நாகம்மா மேல சத்தியம்!” – உணர்ச்சிகள் பொங்க வார்த்தைகளை கொட்டிட்டேன்.
“நீ மொதல்லே எழுதிட்டு வா! அப்புறம் பார்க்கிறேன்!“ 
என்னை அவர் நம்பல! என்னை அவர் நம்பல போல!
அடேய்! இதோ வரேன்டான்னு சொல்லிட்டி கிளம்பி வீட்டுக்கு வந்தாச்சு! நாடகம் எழுதறதென்ன கம்ப சூத்திரமா? கொஞ்ச வசனங்களை பிச்சுபிச்சு கதைக்குள்ளே தூவினா நாடகமாயிடும்! ராத்திரி பூராவும் ரோசனைதான்! தூக்கமே வரல! நாடகத்துக்கான கதையே கிடைக்கல! என்ன ரொம்ப யோசனையா இருக்கீங்க? –என்று கேட்ட ஊட்டம்மாவுக்கெல்லாம் பதில் சொல்லல. சொன்னால் எல்லாம் கெட்டுப்போயிடும்னு தெரியாதா எனக்கு! நாடகத்தில் பெண் கேரக்ட்டர் வரக்கூடாது. ஏனென்றால் ஆர்டிஸ்ட் கெடைக்க மாட்டாங்க! அப்படியே கெடைச்சாலும் நம்ம வூட்டம்மா, வீட்டை பூட்டிட்டு அவங்க ஆயா வீட்டுக்கு போய்டுவாங்க. அதனாலே, எந்தவித பெண் கேரக்ட்டரும் வராம யோசிச்சு, யோசிச்சு கடைசியா ஒரு கதை செட்டாச்சு! அது ஒரு டுபாக்கூர்  கதை என்பது இப்ப தெரியுது! ஆனா அப்பெல்லாம் அந்த கதை ஆஸ்கார் வரைக்கும் போய் அவார்டுகளை அள்ளிட்டு வரும்னு நினைச்சிட்டுருந்தேன். அடுத்த நாளே நண்பரைப்பார்த்து நாடக ஸ்கிரிப்ட்டை தூக்கி அவர் முன்னாலே போட்டேன்.
இதுதான் நாடகம்! புடி! பிடிச்சா நடி! நாலு கேரக்ட்டர்கள்தான்! ஈஸியா ஆர்டிஸ்களை செட் பண்ணிடலாம்!
ட்ராமா-போட்டிக்கு எண்ட்ரி பணத்தை நான் கட்டிடறேன்!
/* நானே எனக்கு வைச்ச பில்லி-சூனியமென்பது பிற்காலத்தில் புரிந்தது! */
”நாடக செலவுக்கு நான்! நடிப்புக்கு நீ!”
-என்னை பற்றி ஓரளவு என் நண்பருக்கு தெரியும்.
நாடக ஸ்கிரிப்ட்டை படிச்சுப்பார்த்தார்.
அட! ஒரே நாளில் எழுதிட்டானே! என்ன நினைச்சாரோ தெரியல!
”நல்லாத்தான் இருக்கு! போட்டுடுவோம்!” – இதை கேட்றப்போ, அப்படியே என் உச்சி மண்டையிலே கிர்கிர்ர்ர்…..தான்!
“சரி! நம்ம நாடக குழுக்கு ஒரு பேர் வைச்சு, நாடகத்திற்கும் ஒரு பேரை வச்சு, நீ எண்ட்ரீ பீஸ் கட்டிடு!
நம்ம நண்பர்கள் சொல்லி நடிக்க ரெடி பண்ணுவது என் பொறுப்பு! அடுத்த வாரமே ரிகர்சல் ஆரம்பிச்சிடலாம்!”
-நண்பர் செம குஷியாகிட்டார்! நான் சொல்லாமலே முக்கியமான ரோலை அவர் எடுத்திகிட்ட சந்தோஷமோ என்னமோ!
-இப்படிப்பட்ட ஒரு விபத்தை அல்லது வரவேற்பை நான் எதிர்பார்க்கல! நாடக ஸ்கிரிப்ட் அப்படி! அப்படியே பாலசந்தர், பாலா ரேஞ்சுக்கு மனது எகிற ஆரம்பிச்சுது! நாடக வரலாற்றிலே முதல் முறையாக
”SMART ARTS”
வழங்கும் நாடகம்!
“ஜனதா மார்கெட்”  - /* இதுதான் நாடக தலைப்பு! துப்பாதீங்க! */
கதை, வசனம், டைரக்‌ஷன்
இதெல்லாம் யாரு? சாட்சாத் நானேதான்!” 
/* அப்புறமா துப்பிக்கலாம்! ஏன்னா இன்னும் நாடகமே ஆரம்பிக்கல பாருங்க! */
-இப்படி போஸ்டர் அடிச்சு பட்டி தொட்டியெல்லாம் ஒட்டியாச்சு!
எண்ட்ரீ ஃபீஸ் கட்டியபின்னர் போஸ்டர் செலவு!
பின்ன சனி தனியாகவா போகும்?
இப்ப மேட்டர் ஜனங்களுக்கு தெரிஞ்சு போச்சு! இவன் யாரடா? புதிசா வந்த சங்கரதாஸ்? ஃப்ரண்ட்ஸ்க எல்லாம் வாழ்த்தினாங்க! என் பேரைச்சொல்லி, ரொம்ப பாராட்டி….. ”நல்ல முயற்சி! உங்களுக்குள்ள ஒரு கலைப்புலி தூங்கிட்டு இருந்திச்சு! அது எந்திரிச்சாச்சு! இனி நாடக மேடை ரண களம்தான்!” தெலுங்கு நாடக சபா தெக்கே ஓடப்பாக்குது! மலையாள நாடக சபா மல்லாக்க படுக்கப்போவுது! உங்க நாடகத்திற்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்!” – எப்படியெல்லாம் உசுப்பேத்தினாங்க தெரியுமா?!
அது ஒரு கனாக்காலம்!
அது சரி! நாடகத்தோட சாராம்சம் இன்னான்னு கேட்க மாட்டீங்களா? கேட்டுட்டு சிரிக்கக்கூடாது! நான் இந்த கதையை சொல்லும்போதே, என் பொண்ணு ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சா! அதே மாதிரி நீங்களும் சிரிக்கக்கூடாது! அப்படி நீங்க சிரிப்பீங்கனு உங்களுக்கே தெரிஞ்சா இப்பவே முடிச்சுக்கலாம் டாட்!
நீங்க சிரிக்க மாட்டீங்க! ஏன்னா கதை அப்படி! கதை சொல்லப்போறேன்! கண்ணை மூடிட்டு கேட்கணும்!
ஒரு பயங்கரமான காடு! கும்மிருட்டு! காலில்லாத ஒரு பெண்! ரொம்ப அழகு! ஆனா ஒரே கண்!
-இப்படி ஆரம்பிப்பேன்னு ஏமாந்து போகாதீங்க!
ரொம்ப சாதாரணமா, சந்தோஷமா ஆரம்பிக்கும் நாடகம் இது!
”ஒரு பிஸியான மார்கெட்! கந்தசாமி டீக்கடை!  /* ஒரு கேரக்ட்டர் வந்தாச்சா! */
பக்கத்திலே ஒரு பாய் கடை! குப்புற படுத்து கொட்டாவி விட்டுட்டு தூங்கி வழியற பாய் கடை இல்லை!
மொபைல் வியாபாரி தாபீக் பாய் கடை! /* ரெண்டாவது கேரக்ட்டர்! */
டீக்கடை பக்கத்திலே ஒரு குப்பைத்தொட்டி!
அங்கதான் குந்திக்குனு கீறார் நம்ம மூணாவது கேரக்ட்டர் கதாநாயகன் பீட்டர்!
பீட்டர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர்! /* உங்களை மாதிரியானு முனகக்கூடாது! ..ச்சுப்! */
கந்தசாமி, தாபீக் பாய் தருகிற உணவுகளை சாப்பிட்டுவிட்டு, குப்பைத்தொட்டியே கதியாய் கெடப்பார் பீட்டர்!
பீட்டர் பொதுவா பேசவே மாட்டார்! ஏதாவது யோசிச்சிட்டு சிரிச்சிட்டே இருப்பார்.
நம்ம பாரத நாட்டிலே பிரதானமா இருக்கிற மூணு மதங்களை சார்ந்து, ஒட்டி கதை நவுருது பார்த்தீங்களா!
எப்படி பிளாட்டு?!
ஒற்றுமையா சந்தோஷமா, கலகலப்பா மார்க்கெட் ஓடுது!
இப்படி இருக்கையிலே நம்ம நாலாவது கேரக்ட்டர் வர்றார்!
அவர் கந்தசாமி கடையிலே கணக்கு வச்சு டீ குடிக்கிற பார்ட்டி! ஆனா காசு தர மாட்டான்!
கந்தசாமியை மெரட்டி மெர்சலாக்கி டீ குடிப்பதே அவன் வேலை!
பாய் கடையிலே மொபைலை ஆட்டையைப்போடும் போது, கையும் களவுமா மாட்டி செம-மாத்து வாங்கிறார் அந்த படவா துக்கிரி! கந்தசாமிதான் செமையா வெளுத்தார்! கொஞ்சம் காமெடி வேற! 
இப்படியாக ஒரு பத்து நிமிஷம் நாடகம் போகும்! அடுத்து வருது பாருங்க ஒரு ட்விஸ்டு!
அப்படியே ட்ராக் மாறும்! பக்கத்து தெருவிலே சண்டை! சாதாரண சண்டையில்லை! கவர்மெண்ட் 144 போடற அளவுக்கு பெரிய சண்டை! துப்பாக்கி சூடு வேற! மத கலவரம்!
இதுதான் சாக்குன்னு, நம்ம துக்கிரி பய, கந்தசாமியை போட்டு தள்ளிடரான்! கடன் ரொம்ப அதிகமாய்டுச்சாம்!
/* இதுதான் அந்த கொலைக்கு நான் கொடுத்த லாஜிக்! லாஜிக்லே இடி விழ! */
கொலைப்பழி பாய் தாபீக் மேலே போட்டாச்சு! துக்கிரி சாமார்த்தியமா தப்பிச்சிட்டான்!
கலவரம் கண்ட்ரோல் ஆயாச்சு! நம்ம கேமரா மார்க்கெட் பக்கம் திரும்புது! மார்க்கெட் ரணகளமா கெடக்கு!
கந்தசாமி கடை, பாய் தாபீக் கடை எரிஞ்சு கெடக்கு!
“..டொய்ய்ய்ய்ய்ய்……..” – பேக் கிரவுண்ட்லே சத்தமா காதை பிளக்கிற மாதிரி ஒரு சோக கீதம்!
இப்ப நம்ம கேமரா அதாவது போகஸ் லைட் குப்பைத்தொட்டி பக்கம் திரும்புது!
குப்பைத்தொட்டி அப்படியே இருக்கு! மெல்லமா பீட்டர் எழுந்து நிற்கிறார்!
மார்க்கெட்டை ஒரு லுக் விடறார்!
கலவர சமயத்திலே அவர் எங்க இருந்தார்? இப்படி ’குண்டக்கமண்டக்க’ கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது!
நீங்களா டைரக்டர்?
சரி! க்ளைமாக்ஸ்க்கு வாங்க!
பீட்டருக்கு பசிக்குது! கந்தசாமி அண்ணன் இல்லை! தாபீக் பாய் இல்லை!
ஆனா பீட்டருக்கு பசிக்குதே!
“..டொய்ய்ய்ய்ய்ய்……..” – பேக் கிரவுண்ட்லே சத்தமா காதை பிளக்கிற மாதிரி அதே சோக கீதம்!
இன்னும் கொஞ்சம் சத்தமா! அந்த சமயம் பார்த்து துக்கிரி பய வர்றான் அந்தப்பக்கம்!
பீட்டரைப்பார்த்து நக்கலா சிரிப்பு வேற! பீட்டருக்கு இப்பத்தான் புரியுது.
இதற்கெல்லாம் காரணம் இந்த துக்கிரிதான்! நம்ம பாலா படத்திலே, பிதாமகன் விக்ரம் மாதிரியே, பாய்ஞ்சு….
அந்த துக்கிரிப்பயல தாக்கி, கொன்னுட்டு…. பீட்டர் அப்படியே கெளம்பிறார்!
 “எங்கே செல்லும் இந்த பாதை! “-இந்த பாட்டு பின்னே ஒலிக்க நாடகம் முடிவுக்கு வருது!
பீட்டரும், துக்கிரியும் நடிப்பிலே தூள் கிளப்பிட்டதாக ஜனங்க சொன்னாங்க!
/* மெண்டலாக நடித்த பீட்டரைக் கேட்டா, ”நான் எப்பவுமே அப்படித்தான் சார்!” – அப்படீங்கிறார்! */
-கதை சொல்லி முடிச்சாச்சு!
அங்கென்ன கசகச’ன்னு சத்தம்?
இதெல்லாம் ஒரு நாடகமான்னு கேட்கக்கூடாதுன்னு ஆரம்பித்திலேயே கன்டிஷன் போட்டது மறந்து போச்சா?
இந்த நாடகத்தை ரிகர்சல் பண்ணி நம்பிக்கையோட அரங்கேற்றம் செய்கிற அடுத்த கட்டமும் வந்தாச்சு!
மேடையிலே மார்க்கெட் செட் போடணுமே?
எங்க ஊர் லோகல் செட் ஆர்டிஸ்ட்டை பிடிச்சு கிட்டத்தட்ட மூவாயிரம் செலவு செய்து ஸ்டேஜ் போட்டேன்.
மார்க்கெட் செட்டிங்!
கந்தசாமி டீக்கடை! ஒரு மொபைல் கடை! ஒரு குப்பைத்தொட்டி!
டி.ராஜேந்தரே பிரமிச்சு போறமாதிரி செமையா இருந்துச்சு!
கண்டபடி செலவு செய்யரானே? –இப்படி வூட்டுக்காரம்மா நேரடியா திட்டல.
ஒருவேளை திட்டியிருந்தாலும் எனக்கிருந்த (கொ)கலை ஆர்வத்திலே காதுலே ஏறியிருக்காது.
தேவைப்படுகிற எல்லா பேக்-கிரண்ட் மூயுசிக்கெல்லாம் ரெக்கார்டு பண்ணிட்டேன்.
அந்த காலத்திலே இப்ப இருக்கிற வசதியெல்லாம் கிடையாது.
சுத்தற டேப்பிலே தான் ஆடியோ ரெக்கார்ட் பண்ணி ஓட வைக்கணும்.
தேச ஒற்றுமையை காட்டும்விதமா ஒரு விநாயகர் பாட்டு, அல்லா பாட்டு அப்புறம் ஏசு பாட்டு!
கலவர சீனுக்கு ஆடியோ கிடைக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருந்திச்சு!
கலவர சீன் யதார்த்தமா இருக்கணுமென்பதற்காக, என் பொண்ணு உதவியை நாடினேன்!
அதாவது கலவர சீன் வரும்போது, என் மகள் தன் சக ரவுடிகளுடன் ஸ்டேஜ் ஏறி, கந்தசாமி டீக்கடையில் நான் காசு கொடுத்து வாங்கி அடுக்கி வச்ச, சாக்லேட், பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்திட்டு ஓடி வந்துடனும்!
இந்த ஐடியா என் மகளுக்கு ரொம்ப பிடித்தது.
நாடகம் பார்க்கும்போது சாப்பிட்டு கொண்டே பார்ப்பார்கள் சிலர்!
ஆனால் இங்க கதையே வேறு!
நாடகக்காரனே சாப்பிட கொடுக்கிறானே!
சாக்லெட், பிஸ்கெட் பேரெல்லாம் எழுதி லிஸ்ட்டே கொடுத்திட்டாள்.
ரொம்ப பெரிய லிஸ்ட் அது! நிறைய ஃப்ரெண்ட்க வருவாங்களாம்!
நாடகம் பார்க்க கூட்டம் வரணுமேன்ட்டு நானும் ஒத்துகிட்டு எல்லாம் வாங்கி வச்சேன்.
எப்படியோ எல்லாம் ரெடியாக்கிட்டேன்!
அது ஒரு தனி செலவு!
அது ஒரு கனாக்காலம்!
நாடகமும் அந்த நல்ல நாளில் ஆரம்பிச்சுது! நல்ல கூட்டம்!
முதல் பிரசவம் அன்னைக்கு மண்டையைப்பிச்சிட்டு ஹாஸ்பிடல் வாரண்டாவிலே சுத்திட்டு இருக்கிற பாசமான புருஷன் மாதிரி ஒரு மோசமான ஃபீலிங்கா நான் இருந்தேன்.
வரும்! ஆனா வராது! – மனசுக்குள்ளே பட்சி கத்திட்டே இருந்தது.
கலவர சீன் வர்ற வரைக்கும் நல்லாத்தான் போய்ட்டு இருந்திச்சு!
கலவர சீன்லதான் நிஜமாவே கலவரம் ஆய்டுச்சு!
கலவர சீன் வரும்போது, லைட்டை டிம்மாக்கி, கலர்கலரா ஃபிளாஸ் தரனும்ன்னு ஒளி அமைப்பாளரிடம் சொல்லி வச்சிருந்தேன்!
நாடகம் போற அழகைப்பார்த்து, அந்த நேரம் அவர் பாத்-ரூம் பக்கம் போய்ட்டார்!
”டூ தவுசண்ட் வாட்” வெளக்கு பப்பரக்கா’னு எரிஞ்சிட்டு இருக்கு!
கலவர சீன் ஆரம்பிச்சாச்சு!
லைட் ஆஃப் ஆகல! கலர் ஃபிளாஸ் வரல!
கட்’ சொல்றதுக்கு இதென்ன சினிமாவா?
சமாளிக்கணுமே!
ஃகரீட்டா சொன்ன மாதிரி என் பொண்ணு ரவுடிகளோட வந்து கந்தசாமி கடையை துவம்சம் பண்ணிட்டாள்!
குறிப்பா சாக்லேட் பாக்ஸை குறி வச்சு வயலென்ஸ் பண்ணிடுச்சு அந்த குரூப்பு!
இப்ப கந்தசாமியை கொலை பண்ணணும்!
அவரா நடியோ நடின்னு நடிச்சிட்டு இருக்கார்!
துக்கிரி கொல்ல ட்ரை பண்ணிட்டு இருக்கார்!
மார்லே குத்தியாச்சு! ரத்தமே வரல!
மேட்டர் இன்னான்னா….
ஒரு குண்டாவிலே, குங்கமத்தை கரைச்சு வச்சிருந்தேன்.
அதை எடுத்து, கலவர கும்பல்லே யாரவது போய் கந்தசாமி மார்லே அதை ஊத்தணும்!
அந்த குண்டாவைக்காணல!
அவசர அவசரமா கொஞ்சம் குங்குமத்தை எடுத்து நானே ஓடிப்போய் அவர் மார்லே போட்டு சமாளிச்சேன். 
என் பொண்ணு அவ ஃப்ரெண்ட்ஸெல்லாம் சாக்லேட் திருடிட்டு இருந்தத ஜனங்க பார்த்திட்டாங்க!
நாடகம் பார்க்க வந்த கூட்டத்திற்கு இந்த சொதப்பல்ஸ் புரிஞ்சு போச்சு!
அதான் ”டூ தவுசண்ட் வாட் பல்ப்” பப்பரக்கானு எரிஞ்சிட்டு இருக்கே!
என் பேரச்சொல்லியும், என் பொண்ணு பேரச்சொல்லியும் ஆடியன்ஸ் ஒரே கூச்சல்!
சீரியஸ்ஸா போக வேண்டிய கலவர-சீன் காமெடியா போய்டுச்சு!
இருந்தாலும் அம்புட்டு மோசமா போகல!
க்ளைமேக்ஸ் சீன்லே பீட்டர் தன் நடிப்பால அதை சமாளிச்சு சோகத்தை வரவழைச்சிட்டார்!
பிதாமகன் விக்ரம் மாதிரியே பர்பாமென்ஸ் கொடுத்தார்!
எங்கே போகும் இந்த பாதை! – ஒரு வழியா கிளைமாக்ஸ் முடிய… எண்ட் கார்டும் போட்டாச்சு!
அப்பத்தான் லைட்-மேன் ஒன் மேட்டரை முடிச்சிட்டு வந்தாரு!
அட! நாடகம் முடிஞ்சாச்சா’னு அப்பாவியா கேட்க..
சக நடிகர் அவரை அடிக்கவே போய்ட்டார்.
“நீ சதி பண்ணி நாடகத்தை கவுத்திட்டே’-னு அவர் மீது பழியைப்போட...
ஒரே ரணகளம்தான்!
இப்படியாக நான் போட்ட நாடகம் சண்டையிலே முடிந்தது!
அடுத்த வருஷ போட்டியில் கலந்த கொள்ள முடியல!
”டாடி! அடுத்த ட்ராமா எப்ப போடப்போறீங்க? ஃபிரெண்ட்ஸ்க ரெடியா இருக்காங்க!” – தன் பங்குக்கு மகளின் கலாய்ப்பு!
ஆனா…
இன்னும் தெலுங்கு நாடக சபா, மலையாள நாடக சபா ஆளுகளுக்கு என்னைப்பார்த்தா ஒரு டர்ர்ர்ர்’தான்!
ஏனென்றால்……
எனக்குள்ளே ஒரு ”கலைப்பன்னி”  களைப்பா தூங்கிட்டு இருப்பது அவங்களுக்குத்தானே தெரியும்!
-அன்புடன் திருநாவு

(இந்த கூத்து நடந்த வருடம் ஜனவரி - 2006)

3 comments:

maithriim said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது :-)
ROFL

amas32

சு. திருநாவுக்கரசு said...

நன்றி!

MOHAN S said...

நன்றி. கலைப் பன்றியின் வேட்டை தொடரட்டும்